சபை உரையாளர் 8 & 9

மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம். பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால், தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்: நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.

வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன். எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.

நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை: ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரலால் புரிந்துகொள்ள இயலாது. மனிதர் எத்துணை முயன்றாலும் அவரால் அதைக் கண்டுகொள்ள இயலாது. ஞானமுள்ளவர்கள் அது தங்களுக்குத் தெரியும் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கும் அது தெரியாது.

சபை உரையாளர் 8:11-17

இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது.

விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும் பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும். நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும்.

விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும். இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை. மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது. திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள். ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.

ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்: ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது: அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள். அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.

ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு: களிப்புடனிரு: திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு: தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு. எப்போதும் நல்லாடை உடுத்து. தரையில் நறுமணத் தைலம் தடவிக்கொள். இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே.

நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்: அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை: சிந்தனை செய்வதுமில்லை: அறிவு பெறுவதுமில்லை: அங்கே ஞானமுமில்லை.

உலகில் வேறொன்றையும் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமைய வேண்டும்.

தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போலவும் கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார். எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும்.

மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன் முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட, ஞானமுள்ளவர் அடக்கமுடன் கூறுவதைக் கேட்பதே நன்று. போர்க் கருவிகளைவிட ஞானமே சிறந்தது. ஆனால் ஒரே ஒரு தவறு நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்.

சபை உரையாளர் 9:1-12, 17-18