ஞானாகமம் 2

இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக் கணித்து உள்ளத்தில் பின்வருமாறு சொல்லிக் கொண்டார்கள்: நம் வாழ்வு குறுகியது: துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக் கேள்விப்பட்டதில்லை. தற்செயலாய் நாம் பிறந்தோம்: இருந்திராதவர்போல் இனி ஆகிவிடுவோம். நமது உயிர்மூச்சு வெறும் புகையே: அறிவு நம் இதயத் துடிப்பின் தீப்பொறியே. அது அணையும்பொழுது, உடல் சாம்பலாகிவிடும். ஆவியோ காற்றோடு காற்றாய்க் கலந்துவிடும். காலப்போக்கில் நம் பெயர் மறக்கப்படும். நம் செயல்களை நினைவுகூரமாட்டார்கள். நம் வாழ்வு முகில் போலக் கலைந்து போகும்: கதிரவனின் ஒளிக்கதிர்களால் துரத்தப்பட்டு, அதன் வெப்பத்தால் தாக்குண்ட மூடு பனிபோலச் சிதறடிக்கப்படும்.

நம் வாழ்நாள் நிழல்போலக் கடந்து செல்கின்றது. நமது முடிவுக்குப்பின் நாம் மீண்டு வருவதில்லை: ஏனெனில் முடிவு குறிக்கப்பட்டபின் எவரும் அதிலிருந்து மீள்வதில்லை. எனவே, வாருங்கள்: இப்போதுள்ள நல்லவற்றைத் துய்ப்போம்: இளமை உணர்வோடு படைப்புப்பொருள்களை முழுவதும் பயன்படுத்துவோம். விலையுயர்ந்த திராட்சை மதுவிலும் நறுமண வகைகளிலும் திளைத்திருப்போம்: இளவேனிற்கால மலர்களில் எதையும் விட்டுவைக்கமாட்டோம். ரோசா மலர்களை அவை வாடுமுன் நமக்கு முடியாகச் சூடிக்கொள்வோம். நம் களியாட்டங்களில் ஒவ்வொருவரும் பங்குகொள்ளட்டும்: இன்பத்தின் சுவடுகளை எங்கும் விட்டுச்செல்வோம். இதுவே நம் பங்கு: இதுவே நம் உடைமை.

நீதிமான்களாகிய ஏழைகளை ஒடுக்குவோம்: கைம்பெண்களையும் ஒடுக்காமல் விடமாட்டோம்: நரைதிரை விழுந்த முதியோரையும் மதிக்கமாட்டோம். நமது வலிமையே நமக்கு நீதி - நமக்குச் சட்டம். வலிமையற்றது எதுவும் பயனற்றதே. 'நீதிமான்களைத் தாக்கப் பதுங்கியிருப்போம்: ஏனெனில் அவர்கள் நமக்குத் தொல்லையாய் இருக்கிறார்கள்: நம் செயல்களை எதிர்க்கிறார்கள்: திருச்சட்டத்திற்கு எதிரான பாவங்களுக்காக நம்மைக் கண்டிக்கிறார்கள்: நற்பயிற்சியை மீறிய குற்றங்களை நம்மீது சுமத்துகிறார்கள்.

கடவுளைப்பற்றிய அறிவு தங்களுக்கு உண்டு என அவர்கள் பறைசாற்றுகிறார்கள்: ஆண்டவரின் பிள்ளைகள் எனத் தங்களை அழைத்துக் கொள்கிறார்கள். அவர்களது நடத்தையே நம் எண்ணங்களைக் கண்டிக்கிறது: அவர்களைப் பார்ப்பதே நமக்குத் துயரமாய் உள்ளது. அவர்களது வாழ்க்கை மற்றவர் வாழ்க்கையினின்று வேறுபட்டது: அவர்களுடைய வழிமுறைகள் மாறுபட்டவை. இழிந்தோர் என நம்மை அவர்கள் எண்ணுகிறார்கள்: தூய்மையற்ற பொருளினின்று ஒதுங்கிச் செல்வதுபோல நம்முடைய வழிகளினின்று விலகிச் செல்கிறார்கள்: நீதிமான்களின் முடிவு மகிழ்ச்சிக்குரியது எனக் கருதுகிறார்கள்: கடவுள் தம் தந்தை எனப் பெருமை பாராட்டுகிறார்கள்.

அவர்களுடைய சொற்கள் உண்மையா எனக் கண்டறிவோம்: முடிவில் அவர்களுக்கு என்ன நிகழும் என ஆய்ந்தறிவோம். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால், அவர் அவர்களுக்கு உதவி செய்வார்: பகைவரிடமிருந்து அவர்களை விடுவிப்பார். அவர்களது கனிவினைக் கண்டுகொள்ளவும், பொறுமையை ஆய்ந்தறியவும், வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் அவர்களைச் சோதித்தறிவோம். இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம்: ஏனெனில் தங்கள் வாய்மொழிப்படி அவர்கள் பாதுகாப்புப் பெறுவார்கள்.'

இறைப்பற்றில்லாதவர்கள் இவ்வாறு எண்ணி நெறி தவறிச்சென்றார்கள். அவர்களின் தீயொழுக்கமே அவர்களைப் பார்வையற்றோர் ஆக்கிவிட்டது. அவர்கள் கடவுளின் மறைவான திட்டங்களை அறியவில்லை: தூய வாழ்வுக்குக் கைம்மாறு உண்டு என்று நம்பவில்லை: மாசற்றவர்களுக்குப் பரிசு கிடைக்கும் என்று உய்த்துணரவில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்: தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

ஞானாகமம் 2:1-24