ஞானாகமம் 3

நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

தூய்மை இழக்காத, தவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்: மனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார். நெறிகெட்ட செயல்களைச் செய்யாத, ஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத அண்ணகர்களும் பேறுபெற்றோர். அவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்: ஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும். நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது. அறிவுத்திறனின் ஆணிவேர் அசைவுறாதது.

விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்: தவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள். அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும், அவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்: முதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள். அவர்கள் இளமையில் இறந்தால் அவர்களுக்கு நம்பிக்கை இராது: தீர்ப்புநாளில் ஆறுதல் கிடைக்காது. நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது.

ஞானாகமம் 3:1-6, 13-19