சீராக் 30

தம் மகனிடம் அன்பு கொண்டிருக்கும் தந்தை அவனை இடைவிடாது கண்டிப்பார்: அப்போது அவர் தம் இறுதி நாள்களில் மகிழ்வோடு இருப்பார். தம் மகனை நன்னெறியில் பயிற்றுவிப்பவர் அவனால் நம்மை அடைவார்: தமக்கு அறிமுகமானவர்களிடையே அவனைப் பற்றிப் பெருமைப்படுவார். தம் மகனுக்குக் கல்வி புகட்டும் தந்தை எதிரியைப் பொறாமை அடையச் செய்கிறார்: தம் நண்பர்கள்முன் அவன்பொருட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைவார்.

அவனுடைய தந்தை இறந்தும் இறவாதவோர்போல் ஆவார்: ஏனெனில் தம் போன்றவனைத் தமக்குப்பின் விட்டுச்சென்றுள்ளார். தாம் வாழ்ந்தபோது தந்தை மகனைப் பார்த்தார், மகிழ்ந்தார்: தம் இறப்பிலும் அவர் வருத்தப்படவில்லை.

குழந்தைக்குச் செல்லம் கொடு: அது உன்னை அச்சுறுத்தும். அதனுடன் விளையாடு: அது உன்னை வருத்தும். அதனுடன் சேர்ந்து சிரிக்காதே: இல்லையேல் நீயும் சேர்ந்து துன்புறுவாய்: இறுதியில் அல்லற்படுவாய். இளைஞனாய் இருக்கும்போதே அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே: (அவனுடைய தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இராதே. இளைஞனாய் இருக்கும்போதே அவனை அடக்கி வளர்.) சிறுவனாய் இருக்கும்போதே அவனை அடித்து வளர்: இல்லையேல் அவன் அடங்காதவனும் கீழ்ப்படியாதவனுமாக மாறுவான். (அவனால் உனக்கு மனவருத்தமே உண்டாகும்.) உன் மகனுக்கு நற்பயிற்சி அளி: அவனைப் பயன்படுத்த முயற்சி செய். அப்போது அவனது வெட்கங்கெட்ட நடத்தையால் நீ வருத்தமாட்டாய்.

உடல்நலமும் வலிமையும் கொண்ட ஏழையர் நோயுற்ற செல்வரினும் மேலானோர். உடல்நலமும் உறுதியும் பொன்னைவிடச் சிறந்தவை: கட்டமைந்த உடல் அளவற்ற செல்வத்தினும் சிறந்தது. உடல்நலத்தைவிட உயர்ந்த செல்வமில்லை: உள்ள மகிழ்ச்சியைவிட மேலான இன்பமில்லை.

கசப்பான வாழ்க்கையைவிடச் சாவே சிறந்தது: தீராத நோயைவிட நிலைத்த ஓய்வே உயர்ந்தது. மூடிய வாய்மீது பொழிந்த நல்ல பொருள்கள் கல்லறையில் வைத்த உணவுப்படையல் போன்றவை. காணிக்கையால் சிலைக்கு வரும் பயன் என்ன? அது உண்பதுமில்லை, நுகர்வதுமில்லை. ஆண்டவரால் தண்டிக்கப்படுவோரும் இதைப் போன்றோரே. கன்னிப்பெண்ணை அண்ணகன் அணைத்துப் பெருமூச்சு விடுதல்போல் அவர்கள் கண்ணால் காண்கிறார்கள்: பெருமூச்சு விடுகிறார்கள்.

உன் உள்ளத்திற்கு வருத்தம் விளைவிக்காதே: உன் திட்டங்களால் உன்னையே துன்பத்துக்கு உட்படுத்தாதே. உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது: அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச் செய்கிறது. உன் உள்ளத்திற்கு உவகையூட்டு: உன்னையே தேற்றிக்கொள்: வருத்தத்தை உன்னிடமிருந்து தொலைவில் விரட்டி விடு. வருத்தம் பலரை அழித்திருக்கிறது: அதனால் எவ்வகைப் பயனுமில்லை.

பொறாமையும் சீற்றமும் உன் வாழ்நாளைக் குறைக்கும்: கவலை, உரிய காலத்திற்கு முன்பே முதுமையாய் வருவிக்கும். மகிழ்ச்சியான நல்ல உள்ளம் உணவுப் பொருள்களைச் சுவைத்து இன்புறுகிறது.

சீராக் 30:1-5, 9-25