சாலமோனின் நீதிமொழிகள் 19

முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.

எண்ணிப் பாராமல் செயலில் இறங்குவதால் பயனில்லை: பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.

மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்: ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.

பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்: ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.

பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்: பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.

வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்: நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.

வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்: அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.

ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்: மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.

பொய்ச் சான்று சொல்பவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்: பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.

அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல: மேலாளோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.

விவேகமுடையோர் எளிதில் சினமடையார்: குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.

அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது: அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.

மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்: மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.

வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்: ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.

சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்: சோம்பேறி பசியால் வருந்துவார்.

திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்: ஆண்டவருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.

ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்: அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்.

மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து: இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.

கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.

அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்: பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.

மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்: ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.

நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையாயிருப்பதே மேல்.

ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்: அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்: தீங்கும் அவரை அணுகாது.

சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்: ஆனால் அதை வாய்க்குக் கொண்டுபோகச் சோம்பலடைவார்.

ஏளனம் செய்வோரை அடி: அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்: உணர்வுள்ளவரைக் கடிந்துகொள், அவர் மேலும் அறிவுடையவராவார்.

தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.

பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே: நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் பறக்கணிக்கிறவன் ஆவாய்.

தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.

இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக்கிறது: முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத்திருக்கிறது.

நீதிமொழிகள் 19:1-29