சாலமோனின் நீதிமொழிகள் 11

கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது: முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.

இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே: தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.

நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்: நம்பிக்கைத் துரோகிகளின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.

கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது: நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்: பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.

நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்: நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.

பொல்லார் எதிர்நோக்குயிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்: அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்: பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.

இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்: நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப்பெறுவர்.

நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்: பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.

நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்: பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.

அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்: நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு:

வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவர்: நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.

திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்: அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.

அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்: பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.

கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்: முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.

இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்: இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.

பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல: நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.

நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்: தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.

வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்: மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.

தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்: இது உறுதி: கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.

மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்: எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.

அளவின்றிச் செலவழிப்போர் செல்வராவதும் உண்டு: கஞ்சராய் வாழ்ந்து வறியவராவதும் உண்டு.

ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்: குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.

தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்: தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.

நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்: தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.

தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்: கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.

குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காதவர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே: அத்தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமையாவர்.

நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்: ஆனால், வன்செயல் உயிராற்றலை இழக்கச் செய்யும்.

நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!

நீதிமொழிகள் 11:1-31