சீராக் 2 & 3

கோழை நெஞ்சத்தவருக்கும் ஆற்றலற்ற கையருக்கும் இரட்டை வேடமிடும் பாவிகளுக்கும் ஐயோ, கேடு வரும்! உறுதியற்ற உள்ளத்தவருக்கும் ஐயோ, கேடு வரும்! ஏனெனில் அவர்கள் பற்றுறுதி கொள்ளவில்லை: எனவே அவர்களுக்குப் பாதுகாப்பு இராது.

தளர்ச்சி அடைந்தோரே, உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்! ஆண்டவர் உங்களைச் சந்திக்க வரும்போது என்ன செய்வீர்கள்? ஆண்டவருக்கு அஞ்சுவோர் அவருடைய சொற்களைக் கடைப்பிடிப்பர்: அவர்மீது அன்புசெலுத்துவோர் அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.

சீராக் 2:12-15

தந்தையரை மதிப்போர் பாவங்களுக்குக் கழுவாய் தேடிக்கொள்கின்றனர். அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர். தந்தையரை மதிப்போருக்குத் தங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி கிட்டும்: அவர்களுடைய மன்றாட்டு கேட்கப்படும். தந்தையரை மேன்மைப்படுத்துவோர் நீடுவாழ்வர்: ஆண்டவருக்குப் பணிந்து நடப்போர் தங்கள் அன்னையர்க்கு மதிப்பு அளிப்பர். தலைவர்கள் கீழ்ப்பணியாளர்கள் போல் அவர்கள் தங்கள் பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.

சொல்லாலும் செயலாலும் உங்கள் பெற்றோரை மதியுங்கள்: அப்பொழுது உங்களுக்கு ஆண்டவரின் ஆசி கிடைக்கும். தந்தையின் ஆசி பிள்ளைகளின் குடும்பங்களை நிலைநாட்டும்: தாயின் சாபம் அவற்றை வேரோடு பெயர்த்தெறிந்துவிடும்.

உங்கள் தந்தையரை அவமதிப்பதில் பெருமை கொள்ளாதீர்கள்: உங்கள் தந்தையரின் சிறுமை உங்களுக்குப் பெருமையாகாது. தந்தை மதிக்கப்பெற்றால் அது பிள்ளைகளுக்குப் பெருமை: தாய்க்கு இழிவு ஏற்பட்டால் அது பிள்ளைகளுக்குச் சிறுமை.

குழந்தாய், உன் தந்தையின் முதுமையில் அவருக்கு உதவு: அவரது வாழ்நாளெல்லாம் அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே. அவரது அறிவாற்றல் குறைந்தாலும் பொறுமையைக் கடைப்பிடி: நீ இளமை மிடுக்கில் இருப்பதால் அவரை இகழாதே.

தந்தைக்குக்காட்டும் பரிவு மறக்கப்படாது. அது உன் பாவங்களுக்குக் கழுவாயாக விளங்கும். உன் துன்ப நாளில் கடவுள் உன்னை நினைவுகூர்வார்: பகலவனைக் கண்ட பனிபோல் உன் பாவங்கள் மறைந்தொழியும். தந்தையரைக் கைவிடுவோர் கடவுளைப் பழிப்பவர் போல்வர்: அன்னையர்க்குச் சினமூட்டுவோர் ஆண்டவரால் சபிக்கப்படுவர்.

நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். (உயர்ந்தோர், புகழ்பெற்றோர் பலர் உள்ளனர். ஆயினும் எளியோருக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.) ஆண்டவரின் ஆற்றல் பெரிது: ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார்.

உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே: உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்: ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை.

உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே: ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை. மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது: தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன.

சீராக் 3:3-16, 18-24