எசாயா 57, 58 & 66

நேர்மையாளர் அழிந்து போகின்றனர்: இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை: இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்: அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை: ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் அமைதிக்குள் சென்றடைகின்றனர்: நேர்மையான வழிமுறையைப் பின்பற்றுவோர் தம் இறுதிப் படுக்கைகளில் இளைப்பாறுகின்றனர்.

கொடியவரோ கொந்தளிக்கும் கடல்போல் இருக்கின்றனர்: அந்தக் கடலால் அமைதியாயிருக்க இயலாது: அதன் நீர்த்திரள்கள் சேற்றையும் சகதியையும் கிளறிவிடுகின்றன: கொடியவர்களுக்கு அமைதியே இல்லை, என்கிறார் என் கடவுள்.

எசாயா 57:1-2, 20-21

நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்கிறார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்: உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண்சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது.

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்? கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பவதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு!

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்.

அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்: அவர் உனக்குப் பதிலளிப்பார்: நீ கூக்குரல் இடுவாய்: அவர் இதோ! நான் என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்: இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்: வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்: உன் எலும்புகளை வலிமையாக்குவார்: நீயும் நீ பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய்.

எசாயா 58:3-11

ஆண்டவர் கூறுவது இதுவே: விண்ணகம் என் அரியணை: மண்ணகம் என் கால்மணை: அவ்வாறிருக்க, எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின: இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்.

எசாயா 66:1-2