நீதிமொழிகள் 5

விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்: அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை. ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்: இருபுறமும் கூரான வால் வெட்டுதலை ஒக்கும் அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்: அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும். வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை: அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்: அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.

ஆகையால், பிள்ளாய்! எனக்குச் செவிகொடு: நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே. அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்: அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே. இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்: கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய். அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்: நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும். நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்: உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.

உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு. அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்: அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக! மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? புரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?

மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை: அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார். பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்: தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர். கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்: தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.

நீதிமொழிகள் 5:3-11, 18-23