சீராக் 28 & 29

பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு: அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்: அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை: அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்?

அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்? உன் முடிவை நினைத்துப்பார்: பகைமையை அகற்று: அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்: கட்டளைகளில் நிலைத்திரு.

சீராக் 28:1-6

அடுத்திருப்பவருக்கு அவருடைய தேவைகளில் கடன் கொடு: உரிய காலத்தில் பிறருடைய கடனைத் திருப்பிக்கொடு. சொல் தவறாதே: அடுத்தவர் மீது நம்பிக்கை வை: உனக்குத் தேவையானதை எப்போதும் நீ கண்டடைவாய். வாங்கின கடனைக் கண்டெடுத்த பொருள்போலப் பலர் கருதுகின்றனர்: தங்களுக்கு உதவியோருக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.

கடன் வாங்கும்வரை கடன் கொடுப்பவரின் கையை முத்தமிடுவர்: அடுத்திருப்பவரின் செல்வத்தைப் பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்: திருப்பிக் கொடுக்கவேண்டிய போது காலம் தாழ்த்துவர்: பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்: காலத்தின்மேல் குறை காண்பர்.

அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுக்க முடிந்தாலும் பாதியைக் கொடுப்பதே அரிது. அதையும் கண்டெடுத்த பொருள் என்றே எண்ணிக்கொள்வர்: இல்லையேல், கடனைத் திருப்பித் தராமல் எமாற்றிவிடுவர்: இவ்வாறு தாமாகவே எதிரியை உண்டாக்கிக் கொள்வர்: சாபத்தையும் வசைமொழியையும் திருப்பிக் கொடுப்பர்: மாண்புக்குப் பதிலாக இகழ்ச்சியைத் தருவர். பலர் கடன் கொடாமலிருந்தது தீய எண்ணத்தினால் அன்று: காரணமின்றி ஏமாற்றப்படலாமோ என்னும் அச்சத்தினால்தான்.

தாழ்நிலையில் இருப்போர் குறித்துப் பொறுமையாய் இரு: நீ இடும் பிச்சைக்காக அவர்கள் காத்திருக்கும்படி செய்யாதே. கட்டளையைமுன்னிட்டு ஏழைகளுக்கு உதவிசெய்: தேவையின்போது அவர்களை வெறுங்கையராய்த் திருப்பி அனுப்பாதே.

பணத்தை உன் சகோதரர்களுக்காகவோ நண்பர்களுக்காகவோ செலவிடு: அழிந்து போகும்படி அதைக் கல்லுக்கு அடியில் மறைத்துவைக்காதே. உன்னத இறைவனின் கட்டளைப்படி உன் செல்வத்தைப் பயன்படுத்து: அது பொன்னிலும் மேலாக உனக்குப் பயனளிக்கும். உன் களஞ்சியத்தில் தருமங்களைச் சேர்த்துவை: அவை எல்லாத் தீமையினின்றும் உன்னை விடுவிக்கும்.

வாழ்வின் அடிப்படைத் தேவைகளாவன: தண்ணீர், உணவு, உடை, மானம் காக்க வீடு. அடுத்தவர் வீட்டில் உண்ணும் அறுசுவை உணவைவிடத் தன் கூரைக்கு அடியில் வாழும் ஏழையின் வாழ்வே மேல்.

குறைவோ நிறைவோ எதுவாயினும், இருப்பதைக் கொண்டு மனநிறைவு கொள்: அப்போது உன் வீட்டாரின் பழிச்சொற்களை நீ கேட்கமாட்டாய். வீடு வீடாய்ச் செல்வது இரங்கத்தக்க வாழ்க்கை: இத்தகையோர் போய்த் தங்கும் இடத்தில் பேசவும் துணியமாட்டார்கள்.

சீராக் 29:2-12, 21-24