சீராக் 8

பாவத்தினின்று மனந்திரும்புவோரைப் பழிக்காதே: நாம் எல்லாருமே தண்டனைக்கு உரியவர்கள் என்பதை நினைத்துக் கொள். முதியோர் எவரையும் இகழாதே: நம்முள் சிலரும் முதுமை அடைந்து வருகிறோம். இறந்தோரைக் கண்டு மகிழாதே: நாம் எல்லாருமே சாக வேண்டும் என்பதை நினைவில் கொள். ஞானிகளுடைய அறிவுரைகளைப் புறக்கணியாதே: அவர்களுடைய பொன்மொழிகளைக் கற்றுணர். அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்: பெரியார்களுக்குப் பணி செய்யக் கற்றுக்கொள்வாய். முதியோரின் உரைகளைப் புறக்கணியாதே: அவர்களும் தங்கள் முன்னோரிடமிருந்தே கற்றுக்கொண்டார்கள்: அவர்களிடமிருந்து நீயும் அறிவுக் கூர்மை பெறுவாய்: தகுந்த நேரத்தில் தக்க விடை கூற அறிந்துகொள்வாய்.

பாவிகளது தீய நாட்டத்தைத் தூண்டிவிடாதே: அது உன்னைப் பொசுக்கிவிடும். இறுமாப்புக் கொண்டோருடன் மோதாதே: மோதினால், உன் சொற்களைக் கொண்டே உன்மீது குற்றம் சாட்டுவர். உன்னிலும் வலியோருக்குக் கடன்கொடாதே: கொடுத்தால், அதை இழந்து விட்டதாக எண்ணிக்கொள். உன் உடைமைக்கு மிஞ்சிப் பிணையம் ஆகாதே: பிணையமானால், பணம் செலுத்த ஆயத்தமாய் இரு. நடுவருக்கே எதிராக வழக்குத் தொடுக்காதே: அவரது பெருமையை முன்னிட்டு அவர் சார்பாகவே தீர்ப்பு வழங்கப்படும். தறுதலைகளோடு பயணம் செய்யாதே: அவர்கள் உனக்குச் சுமையாய் இருப்பார்கள்: தங்களது விருப்பம் போல நடப்பார்கள்: அவர்களது அறிவின்மையால் நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.

முன்கோபிகளுடன் சண்டையிடாதே: அவர்களுடன் ஆளில்லாத் தனியிடத்திற்குச் செல்லாதே. கொலை செய்யவும் அவர்கள் அஞ்சுவதில்லை: உனக்கு உதவி இல்லாத இடத்தில் உன்னைத் தாக்கி வீழ்த்துவார்கள். அறிவிலிகளோடு கலந்தாராயாதே: அவர்களால் இரகசியங்களைக் காப்பாற்ற முடியாது. மறைக்க வேண்டியவற்றை அன்னியர் முன் செய்யாதே: அவர்கள் எதை வெளியிடுவார்கள் என உனக்குத் தெரியாது. திறந்த உள்ளத்துடன் எல்லாரிடமும் பேசாதே: அவர்கள் உனக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.

சீராக் 8:5-19