சீராக் 12

நீ நன்மை செய்தால் யாருக்குச் செய்கிறாய் என்பதைத் தெரிந்து செய்: உன் நற்செயல்களுக்கு நன்றி பெறுவாய். இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்: உனக்குக் கைம்மாறு கிடைக்கும். அவர்களால் இயலாவிடினும் உன்னத இறைவன் கைம்மாறு செய்வார். தீமையில் விடாப்பிடியாய் இருப்போருக்கு நன்மை பிறவாது: தருமம் செய்யாதோருக்கும் அவ்வாறே நிகழும்.

இறைப்பற்றுள்ளோருக்குக் கொடு: பாவிகளுக்கு உதவாதே. நலிவுற்றோருக்கு நன்மை செய்: இறைப்பற்றில்லாதோருக்குக் கொடாதே. அவர்களுக்குரிய உணவைக்கூட நிறுத்திவை: அவர்களுக்கு அதை அளிக்காதே: அதைக்கொண்டே அவர்கள் உன்னை வீழ்த்த நேரிடும். நீ அவர்களுக்குச் செய்த நன்மைகளுக்கெல்லாம் கைம்மாறாக அவற்றைப்போல் இரு மடங்கு தீமை அடைவாய்.

உன்னத இறைவனும் பாவிகளை வெறுக்கிறார்: இறைப்பற்றில்லாதோரை ஒறுக்கிறார். நல்லாருக்குக் கொடு: பாவிகளுக்கு உதவாதே. இன்பத்தில் உண்மையான நண்பனை அறிந்துகொள்ள முடியாது: துன்பத்தில் உன் பகைவனைக் கண்டு கொள்ள முடியும். ஒருவரது உயர்வு அவருடைய பகைவருக்கு வருத்தம் தரும்: அவரது தாழ்வு நண்பரையும் விலகச் செய்யும்.

பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர்? காட்டு விலங்குகளின் அருகில் செல்வோர்மீதும் யாரே பரிவு காட்டுவர்? அவ்வாறே, பாவிகளோடு சேர்ந்து பழகி, அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது யாரே இரக்கம் காட்டுவர்? சிறிது நேரம் அவர்கள் உன்னுடன் உறவாடுவார்கள்: நீ தடுமாற நேர்ந்தால் உன்னைத் தாங்கிக்கொள்ளமாட்டார்கள்.

சீராக் 12:1-9, 13-15