சாலமோனின் நீதிமொழிகள் 13

ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்: இருமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.

நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்: வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.

நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்: நாவைக் காவாதவன் கெட்டழிவான்.

சோம்பேறிகள் உண்ண விரும்பகிறார்கள், உணவோ இல்லை: ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.

நல்லார் பொய்யுரையை வெறுப்பர்: பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.

நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்: பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.

ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு: மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.

அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.

சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்: பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.

மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்: பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.

விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்: சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.

நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச்சோர்வை உண்டாக்கும்: விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.

அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்: போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.

ஞானமுள்ளவரது அறிவுரை வாழ்வளிக்கும் ஊற்றாகும்: அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.

நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்: நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.

கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்: மூடர் தன் மடமையை விளம்பப்படுத்துவார்.

தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்: நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.

நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்: கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.

நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்: மூடர் தம் தீமையை வெறக்காதிருப்பதும் இதனாலேயே.

ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்: மூடரோடு நட்புக்கொள்கிறவர் துன்புறுவார்.

பாவிகளைத் தீங்கு பின்தொடரும்: கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.

நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்: பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.

தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்: ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.

பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்: மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்: பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.

நீதிமொழிகள் 13:1-25