ஞானிகளின் முப்பது முதுமொழிகள்

ஞானிகள் போதித்ததை நான் உனக்குக் கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்: நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள். அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக் கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும். நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன். அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா? அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.

1. ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே: ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே. ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்: அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.

2. கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே: எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே. அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றக்கொள்வாய்: உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.

3. பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே: பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே. அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?

4. வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை ந Pமாற்றி அமைக்காதே.

5. தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்: அவர் பாமர மனிதரிடையே இரார்: அரசு அவையில் இருப்பார்.

நீதிமொழிகள் 22:17-29

6. ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார். உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள். அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே: அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.

7. செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே: அதனால் உனது அறிவை இழந்து விடாதே. இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?

8. கஞ்சர் தரும் உணவை உண்ணாதே: அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே. அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்: உண்டு பருகு என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம். நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்: நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.

9. மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே: உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.

10. வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே: உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே. ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.

11. நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து: அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.

12. பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே: பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள். நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.

13. பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன். உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.

14. வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே: ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு. அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்: உன் நம்பிக்கையும் வீண்போகாது.

15. பிள்ளாய், இதைக் கவனி: ஞானமுள்ளவனாயிரு: உன் மனத்தை நன்னெறியில் செலுத்து. குடிகாரரோடு சேராதே: பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே. குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்: உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.

16. பெற்ற தந்தைக்குச் செவிகொடு: உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே. மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு: ஆனால் அதை விற்பனை செய்யாதே: அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு. நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்: ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார். நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக: உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக.

17. மகனே, நான் சொல்வதைக் கவனி: என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து. விலைமகள் ஒரு படுகுழி: பரத்தை ஓர் ஆழ்கிணறு. அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்: அவள் ஏராளமான பேரை வஞ்வசிப்பவள்.

18. துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள்-இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்? திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே, மதுவைப் பார்த்து, இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன! எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்: பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்: விரியனைப் போலத் தீண்டும். உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்: உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும். கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும். என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை: என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை: நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன் என்று நீ சொல்வாய்.

நீதிமொழிகள் 23:1-35

19. தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே: அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே. அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்: அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.

20. ஞானம் வீட்டைக் கட்டும்: மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும். அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.

21. வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்: வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர். ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை: கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.

22. ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது: எனவே, அவர் வழக்குமன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.

23. தீமை செய்யத் திட்டமிடுபவன் வஞ்சனையாளன் என்னும் பெயர் பெறுவான். மூடர்கள் பாவத்தைத் தவிர வேறெதற்காகவும் திட்டமிடுவதில்லை: ஒழுங்கீனரை மக்கள் அருவருப்பார்கள்.

24. நிறைவுள்ள காலத்தில் உன் மனம் சோர்வடையுமானால், குறைவுள்ள காலத்தில் உன் ஆற்றல் இன்னும் குன்றிப்போகுமன்றோ?

25. கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்: கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார். அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வாயானால், இதயத்தில் இருப்பதை அறிபவர் உன் எண்ணத்தையும் அறிவார் அல்லவா? உன் உள்ளத்தைப் பார்க்கிறவர் அதை அறிவார் அல்லவா? ஒவ்வொருடைய செய்கைக்கும் ஏற்றபடி அவர் பயனளிப்பார் அல்லவா?

26. பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது: கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும். ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாயிருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும்: உன் நம்பிக்கை வீண்போகாது.

27. கயவர் போல் பதுங்கியிருந்து நல்லவர் வீட்டைக் கெடுக்கப் பார்க்காதே: அவர் குடியிருப்பைப் பாழாக்கி விடாதே. நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்: பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.

28. உன் எதிரி வீழ்ச்சியுறும்போது நீ மகிழாதே: அவர் கால் இடறும் போது களிகூராதே. நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்: அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.

29. தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே: வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே. தீயவருக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு இராது: ஏனெனில் பொல்லாருடைய விளக்கு அணைந்து போகும்.

30. பிள்ளாய்! ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சி நட: கிளர்ச்சி செய்வாரோடு உறவுகொள்ளாதே. ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்: அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?

நீதிமொழிகள் 24:1-22