சீராக் 5

உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே: எனக்கு அவை போதும் எனச் சொல்லாதே. உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே: உன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே. எனக்கு எதிராய்ச் செயல்படக்கூடியவர் யார்? எனச் சொல்லாதே: ஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார்.

நான் பாவம் செய்தேன்: இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? எனக்கூறாதே: ஆண்டவர் பொறுமை உள்ளவர். பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப் பாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே. ஆண்டவரின் பரிவு எல்லையற்றது: எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்துவிடுவார் என உரைக்காதே. அவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன: அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.

ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே. நாள்களைத் தள்ளிப்போடாதே. ஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கியெழும்: அவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்துபோவாய். முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே: பேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது.

எல்லா வகைக் காற்றிலும் தூற்றிக் கொள்ளாதே: எல்லா வழிகளிலும் போகாதே: இரட்டை நாக்குக் கொண்ட பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.

உன் மனச்சான்றை உறுதியோடு பின்பற்று: முன் பின் முரண்படாமல் பேசு. விரைந்து செவிசாய்: பொறுத்திருந்து விடை கூறு. உனக்குத் தெரிந்தால், மறுமொழி கூறு: இல்லையேல் வாயை மூடிக்கொள். பெருமையும் சிறுமையும் பேச்சினால் வரும்: நாக்கே ஒருவருக்கு வீழ்ச்சியைத் தரும்.

புறங்கூறுபவன் எனப்பெயர் வாங்காதே: உன் நாவால் மற்றவர்களுக்குக் கண்ணி வைக்காதே. திருடர்களுக்கு உரியது இகழ்ச்சி: இரட்டை நாக்கினருக்கு உரியது கடும் கண்டனம். பெரிதோ சிறிதோ எதிலும் குற்றம் செய்யாதே: நண்பனாவதற்கு மாறாகப் பகைவனாகாதே. கெட்ட பெயர் இழுக்கையும் பழிச்சொல்லையும் வருவிக்கும்: இரட்டை நாக்குக்கொண்ட பாவிகளுக்கு இவை நேரும்.

சீராக் 5:1-15