அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்: கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.
நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.
பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை: நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது.
பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்: இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.
நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை: பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.
பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்: நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.
பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்றலின்றி அழிவர்: நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.
மனிதர் தம் விவேத்திற்கேற்ற புகழைப் பெறுவர்: சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.
வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.
நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.
உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்: வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.
தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.
தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்: நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.
ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்: வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.
மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்: ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.
மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்: விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார்.
உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்: பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.
சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்: ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.
ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்: பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.
சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்: பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
நல்லாருக்கு ஒரு கேடும் வராது: பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.
பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்: உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்.
விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்: மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.
ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்: சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.
மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்: இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.
சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்: பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.
சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்: விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.
நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்: முரணானவரின் வழி சாவில் தள்ளும்.
நீதிமொழிகள் 12:1-28