சாலமோனின் நீதிமொழிகள் 12

அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்: கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.

நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.

பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்ததில்லை: நேர்மையாளரின் வேரை அசைக்கமுடியாது.

பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்: இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.

நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை: பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.

பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்: நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.

பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்றலின்றி அழிவர்: நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.

மனிதர் தம் விவேத்திற்கேற்ற புகழைப் பெறுவர்: சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.

வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாயத் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.

நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.

உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்: வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.

தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.

தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக்கொள்வர்: நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.

ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்: வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.

மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்: ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.

மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்: விவேகிகளோ பிறரது இகழ்ச்சியைப் பொருட்படுத்தார்.

உண்மை பேசுவோர் நீதியை நிலைநாட்டுவோர்: பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.

சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்: ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.

ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்: பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.

சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்: பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.

நல்லாருக்கு ஒரு கேடும் வராது: பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்ததாய் இருக்கும்.

பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்: உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார்.

விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்: மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.

ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்: சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.

மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்: இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.

சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்: பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.

சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்: விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.

நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்: முரணானவரின் வழி சாவில் தள்ளும்.

நீதிமொழிகள் 12:1-28