சீராக் 11

மற்றவருக்குச் செவிசாய்க்குமுன்பே மறுமொழி சொல்லாதே: அடுத்தவர் பேசும்போது குறுக்கே பேசாதே. உன்னைச் சாராதவை பற்றி வாதிடாதே: பாவிகள் தீர்ப்பு வழங்கும்போது அவர்களோடு அமராதே. குழந்தாய், பல அலுவல்களில் ஈடுபடாதே: ஈடுபட்டால், குற்றப்பழி பெறாமல் போகமாட்டாய்: செய்யத் தொடங்கினாலும் முடிக்கமாட்டாய்: தப்ப முயன்றாலும் முடியாது.

சிலர் மிகவும் கடுமையாய் உழைக்கின்றனர்: போராடுகின்றனர்: விரைந்து செயல்புரிகின்றனர்: எனினும் பின்தங்கியே இருக்கின்றனர். வேறு சிலர் மந்தமானவர்கள்: பிறர் உதவியால் வாழ்பவர்கள்: உடல் வலிமை இல்லாதவர்கள்: வறுமையில் உழல்பவர்கள். ஆண்டவர் அவர்களைக் கடைக்கண் நோக்குகின்றார்: தாழ்நிலையினின்று அவர்களை உயர்த்தி விடுகிறார்: அவர்களைத் தலைநிமிரச் செய்கிறார்: அவர்களைக் காணும் பலர் வியப்பில் ஆழ்கின்றனர். நன்மை தீமை, வாழ்வு சாவு, வறுமை வளமை ஆகிய அனைத்தும் ஆண்டவரிடமிருந்தே வருகின்றன.

எனக்குத் தேவையானது என்ன இருக்கிறது? இனிமேல் வேறு என்ன நன்மைகள் எனக்குக் கிடைக்கும்? எனச் சொல்லாதே. எனக்குப் போதுமானது உள்ளது. இனி எனக்கு என்ன தீங்கு நேரக்கூடும்? எனவும் கூறாதே. வளமாக வாழும்போது, பட்ட துன்பங்கள் மறந்து போகின்றன: துன்பத்தில் உழலும்போது, துய்த்த நன்மைகள் மறந்து போகின்றன.

அவரவர் நடத்தைக்கு ஏற்ப இறுதிநாளில் மனிதருக்குப் பரிசு அளிப்பது ஆண்டவர்க்கு எளிதானது. சிறிது நேரத் துன்பம், முன்னர் துய்த்த இன்பத்தை மறக்கச் செய்கிறது. வாழ்வின் முடிவில் மனிதரின் செயல்கள் வெளிப்படுத்தப்படும். இறக்குமுன் யாரையும் பேறுபெற்றவர் எனப் போற்றாதே: பிள்ளைகள் வழியாகவே ஒருவரது தகைமை வெளிப்படும். எல்லா மனிதரையும் உன் வீட்டுக்கு அழைத்து வராதே: இரண்டகர் பல சூழ்ச்சிகள் செய்வர்.

அன்னியரை உன் வீட்டில் வரவேற்றால், அவர்கள் உனக்குத் தொல்லைகளைத் தூண்டிவிடுவர்: கடைசியில் உன் வீட்டாருக்கே உன்னை அன்னியன் ஆக்கிவிடுவர்.

சீராக் 11:8-14, 23-29, 34