சீராக் 13

மையைத் தொடுவோர் தங்களைக் கறைப்படுத்திக் கொள்வர்: செருக்குடையோருடன் சேர்ந்து பழகுவோர் அவர்களைப்போலவே மாறுவர்.

செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி ஏழைகளை இழிவுபடுத்தவும் செய்வார்கள்: ஏழைகளோ அநீதிக்கு ஆளாவதோடு மன்னிப்பும் கேட்கவேண்டும். உன்னால் தங்களுக்குப் பயன் விளையுமாயின், செல்வர் உன்னைச் சுரண்டுவர்: உனக்கு ஒரு தேவை என்றால் உன்னைக் கைவிடுவர். நீ வசதியாய் இருக்கும்போது உன்னோடு ஒட்டி உறவாடுவர்: உன்னை வெறுமையாக்கி விட்டுக் கவலையின்றி இருப்பர்.

உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்: உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து உனக்கு ஊக்கம் அளிப்பர்: உன்னிடம் நயந்து பேசி, உனக்குத் தேவையானது என்ன? எனக் கேட்பர். நீ திகைக்கத் திகைக்க உனக்குப் பல்சுவை விருந்தூட்டி, சிறிது சிறிதாக உன்னை அறவே கறந்து, இறுதியில் உன்னை எள்ளி நகையாடுவர்: பின்னர் உன்னைக் காண நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்: உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர். ஏமாந்து போகாதவாறு எச்சரிக்கையாய் இரு: உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.

எதிலும் முந்திக்கொள்ளாதே: நீ ஒதுக்கப்படலாம். தொலைவில் ஒதுங்கி நில்லாதே: நீ மறக்கப்படுவாய். வலியோரை உனக்கு இணையாக நடத்த முயலாதே: அவர்களின் நீண்ட பேச்சுகளை நம்பாதே. உன்னை ஆழம் காணவே அவர்கள் நீண்டநேரம் பேசுகின்றார்கள்: அவர்கள் சிரித்துப் பேசுவதும் உன்னைக் கணிப்பதற்கே.

இரகசியங்களைக் காப்பாற்றாதோர் இரக்கமற்றோர்: உன்னைக் கொடுமைப்படுத்தவும் சிறைப்படுத்தவும் அவர்கள் தயங்கமாட்டார்கள். அவற்றைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாய் இரு: ஏனெனில் உனது வீழ்ச்சியை மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.

ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் உறவு எது? பாவிகளுக்கும் இறைப்பற்றுள்ளோருக்கும் தொடர்பு எது? கழுதைப் புலிக்கும் நாய்க்கும் இடையே அமைதி எது? செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே சமாதானம் ஏது? காட்டுக் கழுதைகள் பாலைநிலத்தில் சிங்கங்களுக்கு இரையாகும்: ஏழைகளைச் செல்வர்கள் விழுங்குவர்.

இறுமாப்புக் கொண்டோர் தாழ்ச்சியை அருவருப்பர்: செல்வர் ஏழைகளை அருவருப்பர். செல்வர் தடுமாறினால் நண்பர்கள் தாங்குவார்கள்: எளியோர் விழும்போது நண்பர்களும் சேர்ந்து தள்ளி விடுவார்கள். செல்வர் நாத்தவறினால் அவரைக் காப்பாற்றப் பலர் இருப்பர்: தகாதவற்றைப் பேசினும் அவற்றை முறைப்படுத்துவர். எளியோர் நாத்தவறினால் அவர்கள்மீது குற்றஞ் சாட்டுவர்: அறிவுக்கூர்மையோடு பேசினும் அவர்களுக்குச் செவிசாய்ப்பார் யாரும் இலர்.

செல்வர் பேசும்போது எல்லாரும் அமைதியாய்க் கேட்பர்: அவரது பேச்சை வானுயரப் புகழ்வர். ஏழை பேசும்போது, இவன் யார்? எனக் கேட்பர்: பேச்சில் தடுமாற்றம் ஏற்படின், அவரைப் பிடித்து வெளியே தள்ளுவர். பாவக் கலப்பில்லாத செல்வம் நன்று: வறுமை தீயது என இறைப்பற்றில்லாதோரே கூறுவர்.

மனிதரின் உள்ளம் நன்மைக்கோ தீமைக்கோ முகத் தோற்றத்தை மாற்றி விடுகிறது. இனிய உள்ளத்தின் அடையாளம் மலர்ந்த முகம். உவமைகளைக் கண்டுபிடிக்கக் கடும் உழைப்போடு கூடிய சிந்தனை வேண்டும்.

சீராக் 13:1, 3-8, 10-13, 17-26