சபை உரையாளர் 1, 2 & 3

மனிதர் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உழைக்கின்றனர்: ஆனால், அவர்கள் உழைப்பினால் பெறும் பயன் என்ன? ஒரு தலைமுறை மறைகின்றது: மறு தலைமுறை தோன்றுகின்றது: உலகமோ மாறாது என்றும் நிலைத்திருக்கின்றது.

ஞாயிறு தோன்றுகின்றது: ஞாயிறுமறைகின்றது. பிறகு தன் இடத்திற்கு விரைந்து சென்று மீண்டும் தோன்றுகின்றது. தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது: பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது. இப்படிச் சுழன்று சுழன்று வீசித் தன் இடத்திற்குத் திரும்புகின்றது. எல்லா ஆறுகளும் ஓடிக் கடலோடு கலக்கின்றன: எனினும், அவை ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை: மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான இடத்திற்கே திரும்புகின்றன.

அனைத்தும் சலிப்பையே தருகின்றன: அதைச் சொற்களால் எடுத்துரைக்க இயலாது. எவ்வளவு பார்த்தாலும் கண்ணின் ஆவல் தீர்வதில்லை: எவ்வளவு கேட்டாலும் காதின் வேட்கை தணிவதில்லை. முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்: முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும். புதியது என்று உலகில் எதுவுமே இல்லை.

ஏதேனும் ஒன்றைப்பற்றி, இதோ, இது புதியது என்று சொல்லக் கூடுமோ? இல்லை. அது ஏற்கனவே, நமது காலத்திற்கு முன்பே, பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே! முற்காலத்தவரைப் பற்றிய நினைவு இப்போது யாருக்கும் இல்லை: அவ்வாறே, வரும் காலத்தவருக்கும் தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய நினைவு இருக்கப்போவதில்லை.

சபை உரையாளர் 1:3-11

கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்: ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே: காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.

சபை உரையாளர் 2:26

உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை. கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.

இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.

எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின: எல்லாம் மண்ணுக்கே மீளும். மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?

ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.

சபை உரையாளர் 3:13-15, 20-22