சாலமோனின் நீதிமொழிகள் 14

ஞானமுள்ள பெண்கள் தம் இல்லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்: அறிவிற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர்.

நேர்மையாக நடப்பவர் ஆண்டவரிடம் அச்சம் கொள்வார்: நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.

மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்: ஞானமுள்ளவருடைய சொற்களோ அவரைப் பாதுகாக்கும்.

உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை: வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.

வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்: பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.

ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்: ஆனால் அதை அடையான்: விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.

மூடனைவிட்டு விலகிச் செல்: அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?

விவோகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்: மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.

பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்: மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்: நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.

ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே: வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.

பொல்லாரின் குடி வேரோடழியும்: நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.

ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்: முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.

நகைப்பிலும் துயரமுண்டு: மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.

உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்: நல்லவர் தம் செயல்களின் பயனை அடைவார்.

பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்: விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.

ஞானமுள்ளவர் விழிப்புடையவர்: தீமையை விட்டு விலகுவர். முதியோடரோ மடத்துணிச்சலுள்ளவர்: எதிலும் பாய்வார்.

எளிதில் சினங்கொள்பவர் மதிகேடானதைச் செய்வார்: விவேகமுள்ளவரோ பொறுமையோடிருப்பார்.

பேதையர் அறியாமையுடையோர்: விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.

தீயவர் நல்லார்முன் பணிவர்: பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.

ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்: செல்வருக்கோ நண்பர் பலர் இருப்பர்.

அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்: ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.

தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.

கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்: வெறும் பேச்சினால் வருவது வறுமையே.

ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி: மதிகேடருக்கு அவர்களது மடமைதான் பூமாலை.

உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்: பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்: அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமாயிருப்பார்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ்வளிக்கும் ஊற்றாகும்: சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.

மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்: குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.

பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.

மன அமைதி உடல் நலம் தரும்: சின வெறியோ எலும்புறுக்கியாகும்.

ஏழையை ஒடுக்கிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்: வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.

பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சியுறுவார்: கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும்போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.

விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்: மதிகேடரிடம் அதற்கு இடமேயில்லை.

நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்: பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.

கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்: தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.

நீதிமொழிகள் 14:1-35