மத்தேயு 3 & 4

திருமுழுக்கு யோவான் விண்ணரசின் வருகையை அறிவித்தல்

பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, ' விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.

″ ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை ″ என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன்.

ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும்.

மத்தேயு 3:7-10

இயேசு சோதிக்கப்படுதல்

சோதிக்கிறவன் அவரை அணுகி, ' நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும் ' என்றான்.

அவர் மறுமொழியாக, ' மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் ' என மறைநூலில் எழுதியுள்ளதே ' என்றார்.

பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, ' நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ' கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது ' என்று அலகை அவரிடம் சொன்னது.

இயேசு அதனிடம், ' ″ உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம் ″ எனவும் எழுதியுள்ளதே ' என்று சொன்னார்.

மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், ' நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன் ' என்றது.

அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, ' அகன்று போ, சாத்தானே, ' உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய் ' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது ' என்றார்.

மத்தேயு 4:3-10