திருப்பாடல்கள் 41 & 49

எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்: துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.

ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்: நெடுங்காலம் வாழவைப்பார்: நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்: எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார்.

படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்: நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்.

திருப்பாடல்கள் 41:1-3

தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர். உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது: தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது. மனித உயிரின் ஈட்டுத்தொகை மிகப் பெரியது: எவராலும் அதனைச் செலுத்த இயலாது.

ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா? ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.

கல்லறைகளே! அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை. ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது: அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார். தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே: தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே.

பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்: சாவே அவர்களின் மேய்ப்பன்: அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்: அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்: பாதாளமே அவர்களது குடியிருப்பு. ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி: பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார்.

சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே! ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை: அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.

உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், 'நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும், அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்: ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை. மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது: அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்.

திருப்பாடல்கள் 49:6-20