ஞானாகமம் 4

ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும், நற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது: நற்பண்பின் நினைவு என்றும் அழியாதது: அது கடவுளாலும் மனிதராலும் கண்டுணரப்படும். அந்நினைவு பசுமையாய் இருக்கும்பொழுது மாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்: அது நீங்கியதும் அதற்காக ஏங்குவர். மாசற்ற பரிசுகளுக்காக நற்பண்பு போராடி, வெற்றி வாகை சூடி, காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.

இறைப்பற்றில்லாதவர்கள் எண்ணற்ற பிள்ளைகளை ஈன்றபோதிலும் அவர்கள் தளிர்ப்பதில்லை: மணவாழ்க்கைக்குப் புறம்பே பிறந்த வழிமரபு ஆழமாய் வேரூன்றுவதில்லை: உறுதியாய் நிற்பதுமில்லை. சிறிது காலம் அவர்கள் கிளைவிட்டுச் செழித்தாலும், உறுதியற்றவர்களாய்க் காற்றினால் அலைக்கழிக்கப்படுவார்கள்: காற்றின் சீற்றத்தால் வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.

அவர்களுடைய கிளைகள் வளர்ச்சி அடையுமுன்பே முறிக்கப்படும். அவர்களுடைய கனிகள் பயனற்றவை: உண்பதற்கு ஏற்ற அளவு பழுக்காமையால் அவை பாழாய்ப் போகும். முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே தீர்ப்பு நாளில் தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச் சாட்சிகளாய் இருப்பார்கள்.

நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும், இளைப்பாற்றி அடைவார்கள். முதுமையின் மதிப்பு நீடிய வாழ்வினால் வருவதன்று: ஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று. ஞானமே மனிதர்க்கு உண்மையான நரைதிரை: குற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.

நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி, அவருடைய அன்பைப் பெற்றார்: பாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே அவரால் எடுத்துக்கொள்ளப்பெற்றார். தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும், வஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே அவர் எடுத்துக்கொள்ளப்பெற்றார்.

தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்துவிடுகிறது: அலைக்கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்துவிடுகிறது. அந்த நீதிமான் குறுகிய காலத்தில் நிறைவு எய்தினார்: நீண்ட வாழ்வின் பயனை அடைந்தார். அவரது ஆன்மா ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருந்தது. தீமை நடுவினின்று ஆண்டவர் அவரை விரைவில் எடுத்துக் கொண்டார்.

மக்கள் இதைப் பார்த்தார்கள்: ஆனால் புரிந்துகொள்ளவில்லை. ஆண்டவர் தாம் தேர்ந்துகொண்டோர்மீது அருளும் இரக்கமும் காட்டுகின்றார்: தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார் என்பதை அவர்கள் மனத்தில் ஏற்கவுமில்லை.

ஞானாகமம் 4:1-15