ஞானாகமம் 1

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்: நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்: நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள். அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்: அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும் பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும். வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை: பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை.

நற்பயிற்சிபெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்: அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்: அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும். ஞானம் மனிதநேயமுள்ள ஆவி: ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி: உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்: நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே.

ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது: அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது. நேர்மையற்றதைப் பேசுவோர் மறைந்திருக்க முடியாது: தண்டனை வேளையில் நீதியினின்று தப்ப முடியாது.

இறைப்பற்றில்லாதோரின் சூழ்ச்சிகள் நுணுகி ஆராயப்படும்: அவர்களுடைய சொற்கள் ஆண்டவரின் காதுக்கு எட்டும்: அவர்களுடைய நெறிகெட்ட செயல்கள் கண்டிக்கப்படும். விழிப்புடைய காது அனைத்தையும் கேட்கின்றது. முறையீடுகளின் முணுமுணுப்பு செவிக்கு எட்டாமல் போவதில்லை.

பயனற்ற முணுமுணுப்புப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள்: பழிச்சொல் கூறாது உங்கள் நாவை அடக்குங்கள். ஏனெனில் மறைவாய்ப் பேசிய எதுவும் விளைவின்றிப் போகாது. பொய் சொல்லும் வாய் ஆன்மாவைக் கொல்லும்.

நெறிதவறிய வாழ்வால் சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்: உங்கள் செயல்களாலேயே அழிவை வருவித்துக்கொள்ளாதீர்கள். சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை: கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை.

நீதிக்கு இறப்பு என்பது இல்லை. இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாலும் இறப்பை வரவழைத்தார்கள்: அதை நண்பனாகக் கருதி அதற்காக ஏங்கினார்கள்: அதனோடு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்: அதனோடு தோழமை கொள்ள அவர்கள் பொருத்தமானவர்களே.

ஞானாகமம் 1:1-16