சாலமோனின் நீதிமொழிகள் 10

ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்: அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.

தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது: நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்.

வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்: விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.

கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்: அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.

நேர்மையாளர்மீது ஆசி பொழியும்: பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்: பொல்லாரின் பெயரோ அழிவுறும்.

ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்: பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்: கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.

தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்: பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.

நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்: பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.

பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்: தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.

விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்: மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.

ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்: மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.

செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்: ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.

நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்: பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.

நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்: கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.

உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யார்: வசைமொழி கூறுவோர் மடையர்.

மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்: தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.

நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்: பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.

நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்: செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.

ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்: அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.

தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு: ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.

பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்: கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.

சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்: கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.

பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்: பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.

நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்: பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.

ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்: தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது: பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்: வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்: பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.

நீதிமொழிகள் 10:1-32