நீதிமொழிகள் 31

அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது: அது அரசருக்கு அடுத்ததன்று: வெறியூட்டும் மதுவை ஆட்சியாளர் அருந்தலாகாது. அருந்தினால், சட்டத்தை மறந்து விடுவார்கள்: துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.

ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு: மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு. அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்: தங்கள் துன்பத்தை நினையாதிருக்கட்டும்.

பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு: திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக்காகவும் போராடு. அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு: எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.

திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது: அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்: அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்: ஒரு நாளும் தீங்கு நினையாள்.

தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்: அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.

எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.

அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்: மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.

அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்: வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள். அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்: அன்போடு அநிவரை கூறுவாள். தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்: உணவுக்காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பியிருக்கமாட்டாள்.

அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என் வாழ்த்துவார்கள்: அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான். திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு: அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே என்று அவன் சொல்வான்.

எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்: ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்: அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

நீதிமொழிகள் 31:4-12, 18, 20, 23, 25-31