சாலமோனின் நீதிமொழிகள் 22

திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்: வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.

செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு: ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.

எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்: அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.

தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.

நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்: விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.

நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு: முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.

செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்: கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.

அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்: அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.

கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்: அவரே ஆசி பெற்றவர்.

ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்: சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.

ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்: இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.

அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்: கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.

வெளியே சிங்கம் நிற்கிறது: வீதியில் ககால் வைத்தால் கொல்லப்படுவேன் என்கிறான் சோம்பேறி.

பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி: ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.

பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்: கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.

செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.

நீதிமொழிகள் 22:1-16