சீராக் 6

தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே: இல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய். உன் இலைகள் விழுங்கப்படும்: கனிகள் அழிக்கப்படும்: பட்ட மரம்போல நீ விடப்படுவாய். தீய நாட்டங்களுக்கு ஒருவர் இடம் கொடுத்தால் அவையே அவரை அழித்துவிடும்: அவர் பகைவரின் நகைப்புக்கும் ஆளாவார். இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்: பண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.

அனைவரோடும் நட்புடன் பழகு: ஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும். ஆய்ந்து நட்புக்கொள்: நண்பரையும் விரைவில் நம்பிவிடாதே. தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு: அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள். பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு: அவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி, உனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்.

உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு: அவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள். நீ நல்ல நிலையில் இருக்கும்போது, அவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்: உன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்: நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்: உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள். உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்: உன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு.

நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்: இத்தகைய நண்பர்களைக் கண்டவர்கள் புதையலைக் கண்டவரைப் போன்றவர்கள். நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை: அவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை. நம்பிக்கைக்குரிய நண்பர்கள் நலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்: ஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர். ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர். அவர்களை அடுத்தவர்களும் அவர்களைப்போலவே இருப்பார்கள்.

குழந்தாய், இளமைமுதல் நற்பயிற்சியைத் தேர்ந்துகொள்: முதுமையிலும் ஞானம் பெறுவாய். உழுது, விதைத்து, பின் நல்ல விளைச்சலுக்காகக் காத்திருக்கும் உழவர்போன்று ஞானத்தை அணுகு. ஞானத்துக்காக உழைப்போர் சிறிதளவே களைப்படைவர்: விரைவிலேயே அதன் கனிகளை உண்பர். நற்பயிற்சி இல்லாதவர்களிடம் ஞானம் மிகக் கடுமையாக நடந்துகொள்ளும்: அறிவிலிகள் அதனோடு நிலைத்திருக்கமுடியாது. அது அவர்களைச் சோதிக்கும் பாறாங்கல்லாய் இருக்கும்: அவர்கள் அதைத் தள்ளிவிடக் காலம் தாழ்த்தமாட்டார்கள். ஞானம் பெயர்ப் பொருத்தம் உடையது: பலருக்கு அது புலப்படுவதில்லை.

கேட்டறிய ஆர்வம் கொண்டால் அறிவு பெறுவாய்: பிறருக்குச் செவிசாய்த்தால் ஞானியாவாய்: மூப்பர்களின் தோழமையை நாடு: ஞானிகள் யார் எனக் கண்டு அவர்களைச் சார்ந்து நில். கடவுளைப் பற்றிய எல்லா உரைகளுக்கும் செவிசாய்ப்பதில் ஆர்வம் காட்டு: அறிவுக்கூர்மை கொண்ட பழமொழிகளைக் கேட்காமல் விட்டுவிடாதே.

அறிவுக்கூர்மை படைத்தோரை நீ கண்டுவிட்டால், விரைந்து அவர்களிடம் செல்: உன் காலடி பட்டு அவர்களின் வீட்டு வாயிற்படிகள் தேயட்டும். ஆண்டவரின் நெறிமுறைகளை எண்ணிப்பார்: அவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து. அவரே உன் உள்ளத்திற்குத் தெளிவூட்டுவார்: நீ விரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார்.

சீராக் 6:2-22, 33-37