சீராக் 9 & 10

உன் காதல் மனையாளைப் பார்த்துப் பொறாமைப்படாதே: உனக்கே தீங்கு விளைவிக்கும் தீய பழக்கங்களை அவளுக்குச் சொல்லிக்கொடாதே. ஒரு பெண்ணுக்கு நீ அடிமையாகாதே: இல்லையேல், அவள் உன்னையே அடக்கியாள நேரிடும். நெறிகெட்டவளை அணுகிச் செல்லாதே: அவளது வலைக்குள் வீழ்ந்திடுவாய்.

பாடகியுடன் உனக்குத் தொடர்பு வேண்டாம். அவளது மயக்கும் வலையில் சிக்கிக்கொள்வாய். கன்னிப்பெண்ணை உற்று நோக்காதே: நீ தடுமாறி அவளால் தண்டனைக்கு ஆளாவாய். விலைமாதரிடம் உன் உள்ளத்தைப் பறிகொடாதே: உன் உரிமைச் சொத்தை நீ இழக்க நேரிடும்.

அழகான பெண்ணிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக்கொள்: பிறன் மனைவியின் அழகை உற்றுநோக்காதே. பெண்களின் அழகால் பலர் நெறி பிறழ்ந்துள்ளனர்: இதனால் காமம் தீயெனப் பற்றியெரியும். அடுத்தவருடைய மனைவியுடன் அமர்ந்து விருந்துண்ணாதே: அவளுடன் மது அருந்திக் களிக்காதே: உன் மனம் அவளிடம் மயங்கிவிடும்: முடிவில் உன் வாழ்வே வீழ்ச்சியுறும்.

உன் பழைய நண்பர்களைக் கைவிடாதே: புதிய நண்பர்கள் அவர்களுக்கு இணையாகமாட்டார்கள்: புதிய நண்பர்கள் புதிய மதுவைப் போன்றவர்கள். நாள் ஆக ஆகத்தான் அதை நீ சுவைத்துக் களிப்பாய். பாவிகளின் பெருமை கண்டு பொறாமை கொள்ளாதே: அவர்களுக்கு வரவிருக்கும் கேடு உனக்குத் தெரியாது. இறைப்பற்றில்லாதவர்களுக்குப் பிடித்தமானவற்றில் இன்பம் கொள்ளாதே: அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே தண்டனை பெறுவார்கள் என்பதை நினைவில் இருத்து.

கொலை செய்ய அதிகாரம் கொண்டவர்களை விட்டுத் தொலைவில் இரு: அப்பொழுது சாவுபற்றிய அச்சத்தால் நீ அலைக்கழிக்கப்படமாட்டாய்: அவர்களிடம் நீ சென்றால் தவறு ஏதும் செய்யாதே: செய்தால் உன் உயிரை அவர்கள் வாங்கிவிடுவார்கள். கண்ணிகள் நடுவே நீ நடக்கிறாய் என்றும் நகரின் கோட்டை கொத்தளங்களூடே செல்கிறாய் என்றும் அறிந்துகொள். அடுத்திருப்பவரை அறிய முடிந்தவரை முயற்சி செய்: ஞானிகளைக் கலந்து ஆலோசனை செய்.

சீராக் 9:1-6, 8-14

புழுதியும் சாம்பலுமாக மனிதர் எவ்வாறு செருக்குற முடியும்? உயிரோடு இருக்கும்போதே அவர்களது உடல் அழியத் தொடங்கும். நாள்பட்ட நோய் மருத்துவரைத் திணறடிக்கிறது: இன்று மன்னர், நாளையோ பிணம்! மனிதர் இறந்தபின் பூச்சிகள், காட்டு விலங்குகள், புழுக்களே அவர்களது உரிமைச்சொத்து ஆகின்றன.

குழந்தாய், பணிவிலே நீ பெருமைகொள்: உன் தகுதிக்கு ஏற்ற உன்னையே நீ மதி. தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை நீதிமான்களென யாரே கணிப்பர்? தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை யாரே பெருமைப்படுத்துவர்?

ஏழையருக்குத் தங்கள் அறிவாற்றலால் சிறப்பு: செல்வருக்குத் தங்கள் செல்வத்தால் சிறப்பு. வறுமையிலேயே பெருமை பெறுவோர் செல்வச் செழிப்பில் எத்துணைப் பெருமை அடைவர்! செல்வச் செழிப்பிலேயே சிறுமையுறுவோர் வறுமையில் எத்துணைச் சிறுமையுறுவர்!

சீராக் 10:9-11, 28-31